பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிப்பு


பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 5:33 PM GMT (Updated: 9 Jun 2021 5:38 PM GMT)

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.

ஏரியில் கலக்கும் கழிவுநீர்

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் பிரதான கால்வாயாக கோடப்பமந்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் அடியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பழுதடைந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும்போது கழிவுநீர் கால்வாயிலும், அதன் வழியாக ஏரியிலும் கலக்கிறது. 

இதனால் ஏரி மற்றும் கோடப்பமந்து கால்வாய் மாசுபடுவதை தடுக்க பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. முதல் கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரப்பட்டது. பின்னர் பழைய குழாய்கள் அகற்றப்பட்டன. 

தொழிலாளர்கள் பற்றாக்குறை

இதற்கிடையே ஒரு புறத்தில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் முழு ஊரடங்கு உத்தரவால் கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. 

இதனால் கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கால்வாயின் நடுவே பதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட பெரிய குழாய்கள் வாகன நிறுத்துமிடத்தில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

மேலும் பழைய ஆழ்துளை துவாரங்களை அகற்றி விட்டு, புதிய ஆழ்துளை துவாரங்கள் அமைப்பதற்காக தனியாக வட்ட வடிவில் கான்கிரீட் போடப்பட்டு வந்தது. அந்த பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால் கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் பணியை மேற்கொள்வதில் சிக்கல் உள்ளது. பணி நிறுத்தப்பட்டதால் கழிவுநீர் ஏரியில் கலந்து வருகிறது. முழு ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் வந்த பின்னர் தான் பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வருவார்கள். அதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்ட பணி தொடரும் என்று தெரிகிறது.


Next Story