781 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. பிரமுகர் கைது


781 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2021 6:20 PM GMT (Updated: 9 Jun 2021 6:20 PM GMT)

குமாரபாளையத்தில் 781 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

781 மதுபாட்டில்கள் பறிமுதல்; அ.தி.மு.க. பிரமுகர் கைது
குமாரபாளையத்தில் பரபரப்பு
குமாரபாளையம், ஜூன்.9-
குமாரபாளையத்தில் 781 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பிரமுகர் கைது
கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபாட்டில்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் அ.தி.மு.க. பிரமுகர் சண்முகம் என்பவரது விசைத்தறி கூடத்துக்கு சென்று சோதனையிட்டனர்.
அங்கு 781 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது. மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சண்முகம் (வயது 51) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
67 மதுபாட்டில்கள் பறிமுதல்
நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சேலம் சாலையில் நேற்று ஊரடங்கு மீறல் தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு மோட்டார் சைக்கிளில் சாக்கு பையுடன் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ராசிபுரம் அருகே பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்த சங்கர் (29), நாமக்கல் ராமாபுரம்புதூரை சேர்ந்த சக்திவேல் (28) என்பதும் தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் வடமாநில மதுபாட்டில்கள் 67 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் 67 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து குறைவான விலைக்கு மதுபான பாட்டில்களை வாங்கி நாமக்கல்லில் விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
லாரியில் கடத்தல்
மராட்டிய மாநிலத்தில் இருந்து திருச்சிக்கு வெங்காயம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்  வழியாக சென்றது. லாரியை திருச்செங்கோடு புள்ளாகவுண்டம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (30) ஓட்டி சென்றார். புதுச்சத்திரம் கலங்காணி பாலம் பகுதியில் லாரியை நிறுத்தி அதில் இருந்த மூட்டைகளை சிலர் வேனுக்கு மாற்றினர். அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் சாக்குமூட்டைகளை பார்த்தனர்.
அந்த மூட்டைகளை சோதனை செய்து பார்த்த அதில் 144 கர்நாடக மாநில மதுபான பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து லாரி டிரைவர்கள் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, லாரி மேலாளர் கோபிநாத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் (31), குமரேசபுரம் கார்த்திக் (28) ஆகிய இருவரும் எரிசாராயம் விற்றதாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Next Story