திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி சில்லறைக்கு மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள்


திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி சில்லறைக்கு மீன் விற்பனை செய்யும் வியாபாரிகள்
x

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி சில்லறை மீன் விற்பனையை வியாபாரிகள் தொடங்கினர்.


திருச்சி,

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி சில்லறை மீன் விற்பனையை வியாபாரிகள் தொடங்கினர். எனவே, வேறு இடத்திற்கு மீன் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மீன், இறைச்சி விற்பனை

திருச்சி உறையூர் காசிவிளங்கி பகுதியில் இயங்கி வந்த மொத்த மீன் மார்க்கெட், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் மார்க்கெட்டில் கூடுவதால் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அதன்படி, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மொத்த மீன் மார்க்கெட் கடந்த 7-ந் தேதி முதல் செயல்பட தொடங்கியது. அதே வேளையில் அங்கு மீன்களை வாங்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டதால் குறைந்த அளவே கூட்டம் இருந்தது.

விற்பனை மந்தம்

மத்திய பஸ் நிலையத்தில் மீன் விற்கப்படுவதை அறிந்து, பொதுமக்கள் பலரும் அங்கு வந்தனர். ஆனால், அவர்களை போலீசார் அனுமதிக்காமல் கடந்த 2 நாட்களாக எச்சரித்து திருப்பி அனுப்பினர். இதனால், மொத்த மீன் விற்பனை  மந்தமாகவே காணப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே மத்திய பஸ் நிலையத்தில் பொதுமக்கள் சில்லறை விலையில் மீன்களை வாங்க குவிந்தனர். வழக்கமாக தடுக்கும் போலீசார் நேற்று கண்டு கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அங்கு கடைகள் அமைத்துள்ள மீன் வியாபாரிகளும் சில்லறை விலையில் மீன்களை விற்க தொடங்கினர். 

துர்நாற்றம் வீசும் அவலம்

காலை நேரங்களில் குடும்பத்துடன் பெண்கள், தங்களது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்து சில்லறை விலையில் மீன்களை வாங்கிச் சென்றனர். விற்பனை முடிந்து காலை 11 மணிக்கு கடைகள் எடுத்து வைக்கப்படுகிறது. 

மீன் கழிவுகள் ஆங்காங்கே போடப்பட்டாலும் அவற்றை மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினிபோல வெள்ளை பவுடர் தூவி விடுகிறார்கள். ஆனாலும், மீன் துர்நாற்றம் எப்போதும் வீசியவாறுதான் உள்ளது. 

ஊரடங்கு தளர்ந்து பஸ்கள் ஓட ஆரம்பித்தாலும் கூட துர்நாற்றம் சீராக சில நாட்கள் பிடிக்கும் என பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். எனவே, பஸ் நிலையம் அல்லாத வேறு இடத்திற்கு மீன் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story