பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவர் கைது


பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவர் கைது
x

கோவை உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

வடவள்ளி

கோவை உள்பட பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன் திருட்டு 

கோவை கல்வீரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஹரி (வயது 25), ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் செல்போனை வைத்துவிட்டு உள்ளே சென்றார். 

பின்னர் திரும்பி வந்தபோது, வெளியே நின்றிருந்த நபர் ஒருவர் கையை உள்ளேவிட்டு செல்போனை திருடிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.
உடனே அவர் இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை தேடி வந்தனர். 

முதியவர் கைது 

இந்த நிலையில் தனிப்படையினர் கல்வீரம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு நின்றிருந்த ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

 அதில் அவர், மதுரையை சேர்ந்த பாஸ்கர் (61) என்பதும், ஸ்ரீஹரி வீட்டில் செல்போனை திருடியதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

பல்வேறு இடங்களில் கைவரிசை 

இது குறித்து போலீசார் கூறும்போது, பாஸ்கர் மீது சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல் மற்றும் பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. 

பல இடங்களில் அவர் கைவரிசை காட்டி உள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். 


Next Story