கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற செல்போன் செயலி


கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு  பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற செல்போன் செயலி
x

கோவையில் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற செல்போன் செயலியை மாநகராட்சி ஆணையாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை

கோவையில் கொரோனா அல்லாத பிற நோய்களுக்கு பொதுமக்கள் வீடியோ கால் மூலம் சிகிச்சை பெற செல்போன் செயலியை மாநகராட்சி ஆணையாளர் அறிமுகம் செய்து வைத்தார். 

கொரோனா பரவல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு இன்னும் குறையவில்லை. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனா பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதால், பிற உடல்நலபொதுப் பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.

சிறப்பு செயலி அறிமுகம் 

ஒருவேளை அவர்கள் வெளியே சென்றாலும், அவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சில இடங்களில் மருத்துவமனை முழுவதும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் இந்த குறைபாட்டை தவிர்க்க, கோவை மாநகராட்சி நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, டெலி மெடிசன் மூலம் சிகிச்சை பெற புதிய சிறப்பு செல்போன் செயலியை உருவாக்கி உள்ளது.

 இந்த செயலியின் பயன்பாட்டை கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது நகர்நல அதிகாரி ராஜா உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- 

இலவச சிகிச்சை 

மாநகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலியை செல்போனில் பிளே ஸ்டோரில் சென்று சிபிஇசிஒஆர்பி விஎம்இடி (CBECORP Vmed) என்ற டைப் செய்து அந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

மேலும் http://qrgo.page.link/sby6R என்ற இணையதள முகவரியில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இந்த செயலியை பயன் படுத்தி 24 மணி நேரமும் வீடியோ கால் மூலம் டாக்டர்களிடம் இலவசமாக ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறலாம்.

 ஒருவேளை இவ்வாறு ஆலோசனை பெறும்போது கொரோனா அறிகுறிகள் காணப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும். 

இதற்காக போதிய டாக்டர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story