சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க மடீட்சியா கோரிக்கை


சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க மடீட்சியா கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 7:24 PM GMT (Updated: 9 Jun 2021 7:24 PM GMT)

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திட வேண்டும் என்று மடீட்சியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, ஜூன்.
சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திட வேண்டும் என்று மடீட்சியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை மனு
மடீட்சியா தலைவர் முருகானந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கொேரானா தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 30 நாட்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில் சிறுதொழில் நிறுவனங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் பெற்ற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்கியில் பெற்ற கடனுக்கான மாத தவணை செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாமலும் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 7-ந்தேதி தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தபோது சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தமிழக அரசு விலக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
 ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆகவே விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித் தரும் சிறுதொழில் நிறுவனங்களின் நலன் கருதி இன்று முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற இருக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்கி வழக்கம் போல செயல்பட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story