2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்


2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Jun 2021 7:44 PM GMT (Updated: 9 Jun 2021 7:44 PM GMT)

2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்

பெங்களூரு:

2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பராமரிப்பு செலவுகள்

பெங்களூரு மெட்ரோ ரெயில் கழகம் சார்பில் நடைபெற்று வரும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் குறித்து அத்துறை அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:-

மெட்ரோ ரெயில் பயண டிக்கெட் மூலம் மட்டுமே பெரிய அளவில் லாபத்தை ஈட்ட முடியாது. மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வணிக தலங்களை பயன்படுத்தி வருவாயை பெருக்க வேண்டும். பராமரிப்பு செலவுகளை குறைக்க வேண்டும். 

2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதற்காக தலைமை செயலாளர், அடிக்கடி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

டெண்டர் பணிகள்

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்ட பணிகளை நிறைவு செய்தால், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். 

இந்த திட்டத்தில் பையப்பனஹள்ளி முதல் சிக்கபானவாரா வரை 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதை அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் பணிகளை வருகிற அக்டோபர் மாத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்த டெண்டர் பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவு செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இரட்டை ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ் பையப்பனஹள்ளி-ஓசூர் இடையே 48 கிலோ மீட்டர் நீளத்திற்கும், யஷ்வந்தபுரா-சன்னசந்திரா இடையே 21.70 கிலோ மீட்டர் நீளத்திற்கும், பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.323 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மெட்ரோ ரெயில் பணிகள்

கூட்டத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
பெங்களூருவில் முதல் கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் தற்போது 48.3 கிலோ நீட்டர் நீள பாதையில் ரெயில்கள் ஓடுகின்றன. 66.1 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

இதுவரை ரூ.33 ஆயிரத்து 70 கோடி மெட்ரோ ரெயில் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. தற்போது இயக்கப்படும் மெட்ரோ ரெயில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.434 கோடி வருவாய் கிடைக்கிறது. 

சேவை தொடங்கியதில் இருந்து இதுவரை ரூ.1,659 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மெட்ரோ ரெயில்களில் ஒரு நாளைக்கு சுமார் 6 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ரூ.1.67 கோடி வருவாய் கிடைக்கிறது.

போக்குவரத்து வசதி

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த ஏப்ரல் 23-ந் தேதியில் இருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 

மத்திய அரசு, 2-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டம், 2ஏ, 2பி ஆகிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story