ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்


ரூ.8 கோடி திமிங்கல வாந்தி பறிமுதல்
x
தினத்தந்தி 9 Jun 2021 8:00 PM GMT (Updated: 9 Jun 2021 8:00 PM GMT)

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவலக்ள் தெரியவந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான திமிங்கல வாந்தியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவலக்ள் தெரியவந்துள்ளது.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 பேர் கைது

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக கிழக்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளதால், அதில் ஈடுபடும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். 

இவ்வாறு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் விசாரித்த போது, கே.ஜி.ஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோசுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அதாவது போதைப்பொருள் போன்ற ஒரு மர்ம பொருளை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக தெரியவந்தது. 

திமிங்கல வாந்தி

இதையடுத்து, அந்த மர்ம பொருளை விற்க முயன்ற கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, கே.ஜி.ஹள்ளி போலீசார், திறமையாக செயல்பட்டு மர்ம பொருளை விற்க முயன்றதாக 4 பேரை கைது செய்தார்கள். 

அவர்கள் மாகடி ரோடுவை சேர்ந்த சையத் நியாஜில் பாஷா (வயது 54), பேலஸ் குட்டதஹள்ளியை சேர்ந்த சலீம் பாஷா (44), நாசிர் பாஷா (34), ஜே.பி.நகரை சேர்ந்த ரபிவுல்லா ஷெரீப் (45) என்று தெரிந்தது.

இவர்களில் சையத் நியாஜில் பாஷாவிடம் இருந்து ஒரு மர்ம பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அது குறித்து ஆய்வு செய்ய போது, திமிங்கல வாந்தி என்று தெரிந்தது. இந்த திமிங்கல வாந்தி அபூர்வமாக கிடைக்க கூடியதாகும். மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள் தயாரிக்க திமிங்கல வாந்தி பெரிதும் பயன்படுகிறது. 

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் திமிங்கல வாந்திக்கு கடும் கிராக்கி உள்ளது. ஒரு கிலோ திமிங்கல வாந்தி ரூ.1½ கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தற்போது கைதான 4 பேரிடம் இருந்து 6 கிலோ 700 கிராம் எடை கொண்ட திமிங்கல வாந்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் பரிசு

இந்த திமிங்கல வாந்தியை விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். கோலார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த திமிங்கல வாந்தி கிடைத்திருந்தது. அவருக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டதால் 6 கிலோ 700 கிராம் திமிங்கல வாந்தியை சுமார் ரூ.10 லட்சத்திற்கு மட்டுமே  சையத் நியாஜில் பாஷாவிடம் விற்று இருந்தார். 

அதனை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற போது 4 பேரும் சிக்கி இருந்தார்கள். கைதான 4 பேர் மீதும் கே.ஜி.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்.

 இந்த சம்பவம் தொடர்பாக கைதானவர்களிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.
பேட்டியின் போது கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தாாக்ள்.

Next Story