பொன்னார் வாய்க்கால் தூர் வாரும் பணி விரைந்து முடிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரி தகவல்


பொன்னார் வாய்க்கால் தூர் வாரும் பணி விரைந்து முடிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:14 PM GMT (Updated: 9 Jun 2021 9:14 PM GMT)

பொன்னார் வாய்க்கால் தூர் வாரும் பணி விரைந்து முடிக்கப்படும் என்று கண்காணிப்பு அதிகாரி கூறினார்

தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் டெல்டா பாசன விவசாயிகளுக்கு பொன்னார் பிரதான கால்வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. குருவாடி கிராமத்தில் உள்ள பொன்னார் வாய்க்காலின் தலைப்பு பகுதியில் இருந்து 24.85 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த வாய்க்கால் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் தூர் வாரப்படுகிறது. இந்த கால்வாய் மூலம் 11 ஊராட்சிகளை சேர்ந்த 25 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலப்பரப்பில் நஞ்சை நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்தநிலையில், வருகிற 12-ந் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அதற்கு முன்னதாக பிரதான வாய்க்காலை முழுமையாக தூர்வார முடிவு முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் பொன்னார் தலைப்பு கோவிந்தபுத்தூர், இடங்கண்ணி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளை தமிழக விளையாட்டுத் துறை செயலாளரும், அரியலூர் மாவட்டத்துக்கான பாசனத் துறை கண்காணிப்பு அதிகாரியுமான ரமேஷ்சந்த் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் வாய்க்கால் தூர்வாரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளதாகவும், மீதிப்பணியும் விரைந்து முடிக்கப்படும். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதும் பொன்னார் பாசன விவசாயிகள் பயனடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story