தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்


தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:29 PM GMT (Updated: 9 Jun 2021 9:29 PM GMT)

குன்னம் அருகே தம்பதியரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 62). விவசாயியான இவருக்கும், ஜோதிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு விவேகானந்தன் என்ற மகனும் கமலாதேவி என்ற மகளும் உள்ளனர். ஜோதி, ஏற்கனவே இறந்து விட்டதால் அறிவழகி என்ற பெண்ணை பெரியசாமி 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு முருகானந்தம் என்ற மகனும், சத்தியா என்ற மகளும் உள்ளனர். முருகானந்தம் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சத்தியாவுக்கு திருமணமாகி கோவில்பாளையம் தேனூரில் கணவருடன் வசித்து வருகிறார்.  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியசாமி வீட்டுக்குள் நுைழந்த மர்ம மனிதர்கள் அவரையும், அறிவழகியையும் கொலை செய்து விட்டு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
5 தனிப்படைகள் அமைப்பு
இந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில், பெரியசாமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அல்லிநகரம் புறவழிச்சாலையில் உள்ள நிலத்தை விற்று ரொக்கமாக பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை கொண்டு வாங்கிய கடனை அடைத்து உள்ளார். அதில் மீதியுள்ள பணத்தில் நகைகளை வாங்கி வைத்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மேல் விடியற்காலை 3.30 மணிக்குள் தம்பதியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்
இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தனிப்படையினர் கூறினர்.


Next Story