போக்குவரத்து போலீசாருக்காக நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் கூடுதல் கமிஷனர் தொடங்கி வைத்தார்


போக்குவரத்து போலீசாருக்காக நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் கூடுதல் கமிஷனர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Jun 2021 11:53 PM GMT (Updated: 9 Jun 2021 11:53 PM GMT)

போக்குவரத்து போலீசாருக்காக நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் கூடுதல் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

பூந்தமல்லி,

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் சேவைக்காக போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனால் போலீசார் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 5 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை வழங்கினர். இதையடுத்து சென்னை அரும்பாக்கம் அண்ணா வளைவு அருகே போக்குவரத்து போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் 5 நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்களை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் பிரதீப்குமார், போக்குவரத்து இணை கமிஷனர் லலிதா லட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முன்னதாக அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் கமிஷனர் பிரதீப்குமாரும் உடல் பரிசோதனை செய்து கொண்டார். பின்னர் போக்குவரத்து போலீசாருக்கு முககவசங்கள், கை கழுவும் திரவம் உள்ளிட்ட உபகரணங்களையும் வழங்கினார்கள்.

இந்த வாகனங்கள் சுழற்சி முறையில் ஆங்காங்கே சென்று பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு ஆக்சிஜன் அளவு, வெப்ப அளவு பரிசோதனை செய்து, அவர்களுக்கு கொரோனா பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா? என்பது பரிசோதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Next Story