சென்னை அணுமின்நிலையம் சார்பாக ரூ.1¼ கோடியில் கல்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்


சென்னை அணுமின்நிலையம் சார்பாக ரூ.1¼ கோடியில் கல்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்
x
தினத்தந்தி 10 Jun 2021 12:59 AM GMT (Updated: 10 Jun 2021 12:59 AM GMT)

சென்னை அணுமின்நிலையம் சார்பாக ரூ.1¼ கோடியில் கல்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வரைவோலையை கலெக்டரிடம் ஒப்படைத்த அணுமின் நிலைய இயக்குநர்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனமான சென்னை அணு மின்நிலையம் தமது 2 அலகுகள் மூலம் அணுவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து நாட்டுக்கு வழங்கி வருகிறது. மின்உற்பத்தி தவிர தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கம்பாக்கம், மாமல்லபுரம், லட்டூர், உட்பட பல்வேறு கிராம மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலைவசதி, மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கூடங்களில் ஆய்வக கட்டிடங்கள், மீனவர்களுக்கு செயற்கைப் பவளப்பாறைகள் அமைத்தல், தொழிற்பயிற்சிகள் உள்பட சமூகப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், கூவத்தூர், நெரும்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், திருக்கழுக்குன்றம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க சென்னை அணுமின்நிலையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதற்கான செலவுத்தொகை ரூ.1 கோடியே 23 லட்சத்து 20 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை அணுமின்நிலைய இயக்குநர் எம்.பலராமமூர்த்தி மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸிடம் ஒப்படைத்தார்.

நிலைய சமூகப் பொறுப்புக்குழு தலைவர் சுபாமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், திட்ட இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

Next Story