83 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது


83 மதுபாட்டில்கள் பறிமுதல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2021 1:20 PM GMT (Updated: 10 Jun 2021 1:20 PM GMT)

மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்திய 83 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்:

கடந்த 31-ந்தேதியில் இருந்து, நேற்று முன்தினம் வரை மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபானம் கடத்தி வந்த 6 பேர், அடுத்தடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 1,070 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்தது. இதையடுத்து வழக்கம் போல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர ஜெயபால், மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனையிட்டனர். 

அப்போது எஸ்-1, எஸ்-2, டி-2 ஆகிய ரெயில் பெட்டிகளில் இருக்கைக்கு அடியில் 3 பைகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த பைகளை திறந்து பார்த்த போது, 3 பைகளிலும் மொத்தம் 83 வெளிமாநில மதுபாட்டில்கள் இருந்தன. 

அதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பெட்டிகளில் இருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். 

அதில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகரை சேர்ந்த முரளிதரன் (வயது 50), மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (52), வாடிப்பட்டி தென்கரையை சேர்ந்த அமர்நாத் (28) என்பதும், மைசூரில் இருந்து மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
------------

Next Story