அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் இறந்தவர்கள் உடலை தாமதமாக வழங்குவதாக உறவினர்கள் சாலை மறியல்


அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் இறந்தவர்கள் உடலை தாமதமாக வழங்குவதாக உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Jun 2021 4:46 PM GMT (Updated: 10 Jun 2021 4:46 PM GMT)

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இறந்தவர்கள் உடலை தாமதமாக வழங்குவதாகக் கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை

உடலை ஒப்படைக்க லஞ்சம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி உள்பட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமன்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தநிலையில் கொரோனா தொற்றுக்காக சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடலை ஒப்படைக்க, அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்குவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. லஞ்சம் வாங்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

சாலை மறியல்

நேற்று மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை காலதாமதமாக வழங்குவதாக கூறி, பாதிக்கப்பட்ட உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பிரேதப் பரிசோதனை அறைக்கு முன்பு அடுக்கம்பாறை-மூஞ்சூர்பட்டு பாதையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்ததும் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் வேலூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரசம் பேசினர். இறந்தவர்களின் உடலை உடனடியாக வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
--

Next Story