தென்காசி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 23 நாளில் குணமடைந்த 244 கொரோனா நோயாளிகள்


தென்காசி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 23 நாளில் குணமடைந்த 244 கொரோனா நோயாளிகள்
x
தினத்தந்தி 10 Jun 2021 7:47 PM GMT (Updated: 10 Jun 2021 7:47 PM GMT)

தென்காசி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 23 நாளில் 244 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்தனர்.

தென்காசி:
தென்காசி சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 23 நாட்களில் 244 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

சித்த மருத்துவ சிகிச்சை

தென்காசி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்து உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் 19-ந்தேதி மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. 
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா தலைமையில் முதன்மை அலுவலர் டாக்டர் கலா நேரடி மேற்பார்வையில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

உடற்பயிற்சி

இங்கு முழுக்க முழுக்க சித்த மருத்துவ மூலிகைகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 2 முறை மூலிகை ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 3 வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. மேலும் யோகா, தியானம், உடற்பயிற்சி ஆகியவையும் அளிக்கப்படுகிறது.
இங்கு மொத்தம் 144 படுக்கைகள் உள்ளன. இதுவரை 201 ஆண்கள், 120 பெண்கள் என மொத்தம் 324 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 40 பேர் சுவாச பிரச்சினை காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

244 பேர் குணம்

கடந்த 19-ந் தேதி முதல் நேற்று வரை 23 நாட்களில் 147 ஆண்களும், 97 பெண்களும் என மொத்தம் 244 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 40 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது சிகிச்சை மையத்தில் 104 படுக்கைகள் காலியாக உள்ளன. 
இதேபோல் சிவகிரியிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் சமீபத்தில் அமைக்கப்பட்டு அங்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story