சேலம் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டை: சாராயம் கடத்தி விற்பனை; 19 பேர் கைது 332 லிட்டர் பறிமுதல்


சேலம் மாவட்டம் முழுவதும் அதிரடி வேட்டை: சாராயம் கடத்தி விற்பனை; 19 பேர் கைது 332 லிட்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:09 PM GMT (Updated: 10 Jun 2021 9:09 PM GMT)

சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக சாராய வேட்டை நடத்தினர். இதில் சாராயம் கடத்தி விற்ற 19 பேரை கைது செய்த போலீசார் 332 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

சேலம்:
சேலம் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக சாராய வேட்டை நடத்தினர். இதில் சாராயம் கடத்தி விற்ற 19 பேரை கைது செய்த போலீசார் 332 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் சோதனை
சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கையொட்டி யாராவது சட்டவிரோதமாக மது மற்றும் சாராயம் விற்பனை செய்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் நெய்க்காரப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகமளிக்கும் வகையில் சரக்கு வேனில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 38), கணேசன் (32), கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (38) ஆகியோர் என்பதும், கருமந்துறையில் இருந்து சேலத்துக்கு சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
சாராயம் பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 லிட்டர் சாராயம், ரூ.1,600 மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சேலத்துக்கு சாராயம் கடத்தி வந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (27) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணியின் போது சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆணையம்பட்டி
* ஆணையம்பட்டியில் வீரகனூர் மெயின் ரோட்டில் வசிக்கும் குணசேகரன்(44) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராயம் விற்றதாகவும், சின்ன கரட்டூர் பகுதியில் பச்சைமலை மாயம்பாடியை சேர்ந்த செல்லதுரை (34) என்பவர் சாராயம் விற்றதாகவும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்
* ஆத்தூர் அருகே தென்னங்குடிபாளையம்-புதுப்பாளையம் சாலையில், மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி வந்த சிங்காரப்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார்(வயது 22), பெத்தநாயக்கன்பாளையம் அடியனூர் கிராமத்தை சேர்ந்த சக்தி (26), அதே பகுதியை சேர்ந்த துரைசாமி (24),ஆத்தூர் ராணிப்பேட்டை பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த வெற்றிவேல் (39) ஆகிய 4 பேரை ஆத்தூர் ஊரக போலீசார் கைது செய்தனர்.
கருப்பூர்
* பெத்தநாயக்கன்பாளையம் மீனவர் தெரு பகுதியை சேர்ந்த முத்து (24), மேலக்காடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் (36) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து 31 மதுபாட்டில்களை கடத்தி வந்த போது கருப்பூர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
*  தேவூர் போலீசார் அரசிராமணி எல்லப்பாளையம் முதலைபாலிகாடு பகுதியிலுள்ள கரட்டில் சோதனை செய்தனர் அப்போது மிகப் பெரிய பாறை அடியில்  கேனில் சுமார் 100 லிட்டர் சாராய ஊறல் போடப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து சாராய ஊறல் போடப்பட்ட கேனை உடைத்து அழித்தனர். மேலும் இந்தப் பகுதியில் சாராய ஊறல் போட்டது யார். என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மதுவிலக்கு போலீசார்
தலைவாசல் அருகே நெய்யமலை பிரிவு ரோட்டில் ஏரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா சென்றாயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவரைம், அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் (26) என்பவரையும் ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story