சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு மையத்தில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்


சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு மையத்தில் மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 10 Jun 2021 9:29 PM GMT (Updated: 10 Jun 2021 9:29 PM GMT)

சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு மையத்தில் 500 ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்தார்.

சேலம்:
சேலம் இரும்பாலை வளாகத்தில் கொரோனா சிறப்பு மையத்தில் 500 ஆக்சிஜன் கூடிய படுக்கை வசதிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று திறந்து வைத்தார்.
கொரோனா சிகிச்சை மையம்
சேலம் இரும்பாலை வளாகத்தில் முதல் கட்டமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, அங்கு மேலும் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்துமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து இரும்பாலையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.  தற்போது அந்த பணிகள் முடிவடைந்தது.
மேலும் 500 ஆக்சிஜன் படுக்கைகள்
இந்த நிலையில் நேற்று காலை மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மேலும் 500 ஆக்சிஜன் படுக்கைகள் அடங்கிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். 
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், பா.ம.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் இரும்பாலையில் ஏற்கனவே 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை ைமயத்தில், கடந்த 2 வாரங்களாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. தற்போது அது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சேலம் இரும்பாலை வளாகத்தில் 1,000 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
12,658 படுக்கை வசதிகள்
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் 12,658 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 7,065 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது. சேலம் மாவட்டத்தில் தற்போது. 10 சதவீதம் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. பூஜ்ஜியம் என்ற நிலை விரைவில் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 
சேலம் இரும்பாலை வளாகத்தில் முதற்கட்டமாக அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தில் 310 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 280 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மீதியுள்ளவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. 
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

Next Story