சின்னாளப்பட்டி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி; அண்ணன் உள்பட 3 பேர் படுகாயம்


சின்னாளப்பட்டி அருகே கார் கவிழ்ந்து வாலிபர் பலி; அண்ணன் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Jun 2021 4:29 PM GMT (Updated: 11 Jun 2021 4:29 PM GMT)

சின்னாளப்பட்டி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். அவரது அண்ணன் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சின்னாளபட்டி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவர் தனது குடும்பத்தோடு கோவையில் தங்கி வியாபாரம் செய்து வருகி்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் நேற்று அவர் கோவை செல்வதற்காக சொந்த ஊரில் இருந்து குடும்பத்தினருடன் ஒரு காரில் புறப்பட்டார். காரில் குணசேகரன், அவரது மனைவி ஆரோக்கிய அமுதா, குணசேகரனின் தம்பி பாஸ்கர் மற்றும் உறவினர் ஒருவர் என 4 பேர் வந்தனர். காரை பாஸ்கர் (வயது 35) ஓட்டினார். 
இவர்கள் வந்த கார் நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த கோட்டைப்பட்டி பிரிவு அருகே நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 
மேலும் காரில் வந்த குணசேகரன் உள்பட மற்ற 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story