கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி


கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 11 Jun 2021 7:37 PM GMT (Updated: 11 Jun 2021 7:37 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 96 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:

பலி எண்ணிக்கை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 42 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 18 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 21 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும் என மொத்தம் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,230 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தாலுகா கோனேரிப்பாளையத்தை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும், குன்னம் தாலுகா கீழப்புலியூரை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியும், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
1,182 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் இருந்து 8,897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,182 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 812 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் தடுப்பூசி 44 மட்டுமே கையிருப்பில் உள்ளது.

Next Story