காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

ராஜபாளையம் அருேக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருேக குடிநீர் வழங்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
குடிநீர் வினியோகம் 
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் தற்போது 11 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 
20-வது வார்டை சேர்ந்த வடக்கு மலையடிப்பட்டி பகுதிக்கு கடந்த 8-ந் தேதி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலையில், இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மலையடிப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை 
இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த நகராட்சி தண்ணீர் திறப்பாளர் கனகராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் காலியானதால் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை எனவும், உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
நடவடிக்கை 
அதேபோல குறைந்தபட்சம் 7 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
பொது மக்கள் கோரிக்கை குறித்து நகராட்சி ஆணையரிடம் கூறி, வாரம் ஒரு முறை தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர் கூறியதை அடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story