பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jun 2021 10:14 PM GMT (Updated: 11 Jun 2021 10:14 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலம் அரசு கலைக்கல்லூரி  அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக பிரிவு நிர்வாகி சுப்பிரமணியம், முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் ஆக்ஸ்போர்டு ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர் மெடிக்கல் பிரபு மற்றும் நிர்வாகிகள் சிவகுமார், சாந்தமூர்த்தி, யுவராஜ், மகளிர் அணி நிர்வாகி சாரதா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 
10 இடங்கள்
இதேபோல் சேலம் அம்மாபேட்டை மெயின் ரோட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறை சார்பில் அதன் மாநில செயலாளர் பச்சப்பட்டி பழனிசாமி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர்
இதே போல ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமை தாங்கினார். அப்போது மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து சுமை தூக்கும் வண்டியில் ஏற்றி அதனை கையில் இழுத்து ஊர்வலமாக சென்று நூதன போராட்டம் நடத்தினர். இந்த ஊர்வலமானது மணிக்கூண்டு, பழைய பஸ் நிலையம் வழியாக சென்று ஸ்தூபி அருகில் இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மகளிர் காங்கிரஸ் ஜமுனா தங்கதுரை, வாழப்பாடி ராஜாராம், திக்கியாம்பாளையம் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story