தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் இடையே வாக்குவாதம்


தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் இடையே வாக்குவாதம்
x
தினத்தந்தி 12 Jun 2021 5:55 PM GMT (Updated: 12 Jun 2021 5:55 PM GMT)

கரூரில் கொரோனா பரவல் எதிரொலியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கரூர்
கொரோனா பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
இதில் கரூர் மாவட்டத்தில் நாள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுதல், பரிசோதனை செய்து நோய் தொற்று கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடந்து வருகிறது. 
வாக்குவாதம்
இந்தநிலையில், நேற்று கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், இனாம் கரூர் நகர்புற ஆரம்பசுகாதார நிலையம், பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 
இதில் பசுபதீஸ்வரா நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு முதலில் வரும் 500 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாலையே 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியை இ்ல்லாமல் நீண்ட வரிசையில் தடுப்பூசி போடுவதற்காக நின்றனர். இதில் ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு டோக்கன் பெற்றவர்களும், பெறாதவர்களும் நின்றனர். இதனால் தடுப்பூசி போடுவதில் குழப்பம் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை 
இதனையடுத்து அங்கு சுகாதாரத்துறை அதிகாரிகள், நகராட்சி பணியாளர்கள், போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டோக்கன் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் வரிசை முறையில் வரும் 500 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தனர். 
இதையடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் என தனி வரிசை அமைக்கப்பட்டு, முதலில் வந்த 500 பேருக்கு மட்டும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story