கடனை திருப்பி செலுத்த வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது


கடனை திருப்பி செலுத்த வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது
x
தினத்தந்தி 12 Jun 2021 6:26 PM GMT (Updated: 12 Jun 2021 6:26 PM GMT)

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனை திருப்பி செலுத்த வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்று ககெ்டர் கிரண்குராலா கூறினார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களை நெருக்கடி கொடுத்து வசூலிக்கக்கூடாது என்பதை வலியூறுத்தி அனைத்து வங்கிகள் மற்றும் அனைத்து நுண் கடன் நிதி நிறுவனங்களின்  ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தெய்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில் கலெக்டர் கிரண்குராலா பேசியதாவது:- மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் சுயமாக சிறுதொழில் செய்பவர்கள் வங்கிகள் மற்றும் தனியார் நுண் கடன் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று பல்வேறு வியாபாரம்  மற்றும் தொழில்கள் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடன் பெற்றவர்கள் கடன் தொகையினை திரும்ப செலுத்த இயலாத சூழ்நிலை உள்ளது.

கடன் தொகை 

 இந்த நிலையில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் நுண் கடன் நிதி நிறுவனங்கள் மகளிர் சுயஉதவி குழுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையை வசூலிப்பதில் மிகவும் கடுமையான போக்கினை கையாண்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருவதோடு, ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது.
 மேலும் பொது மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை  தேவைகள் பாதிக்காத வகையில் தமிழக அரசு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது.  ரிசர்வ் வங்கியும், கொரோனா பெருந்தொற்று காரணமாக எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வங்கிகள் மற்றும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. 

நடவடிக்கை

அதன்படி மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கொரோனா பெருந்தொற்று அழுத்தத்திற்கு ஆளானவர்களுக்கு  கடனை திரும்ப செலுத்துவதற்கு கால நீட்டிப்பு, தகுதிக்கேற்ப கூடுதல் கடன் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் நுண்கடன் நிதி நிறுவனங்கள் செயல் படவேண்டும். எனவே மகளிர் சுயஉதவி குழுக்கள் பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி வசூல் செய்யக்கூடாது.
 இதனை மீறும் வங்கிகள் மற்றும் நுண் கடன் நிதிநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் ரூபா, உதவி திட்ட அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் சிறு கடன் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story