ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்


ஊரடங்கு தளர்வுகள் அமல்: பூங்காக்களில் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் மக்கள்
x
தினத்தந்தி 14 Jun 2021 2:21 AM GMT (Updated: 14 Jun 2021 2:21 AM GMT)

பூங்காக்களில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மெல்ல மெல்ல குறையத்தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்திற்கு அதாவது வருகிற 21-ந்தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

அந்தவகையில், அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். அதேபோல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்க்கைகான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொர்ந்து சென்னையில் உள்ள பூங்காக்களில் காலைமுதல் மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் பூங்காக்களில் நடைபயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆர்வமுடன் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story