தம்பதியை கொன்று நகை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது


தம்பதியை கொன்று நகை கொள்ளை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2021 8:23 PM GMT (Updated: 14 Jun 2021 8:23 PM GMT)

குன்னம் அருகே தம்பதியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குன்னம்:

தம்பதி கொலை
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி அறிவழகி. வீட்டில் இருந்த இந்த தம்பதியை கடந்த 8-ந் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவ்வழக்கில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
2 பேர் கைது
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக குன்னம் அருகே உள்ள மேல உசேன் நகரம் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்துவின் மகன் மணிகண்டன்(வயது 22), செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள அமைந்தகரை பகுதியை சேர்ந்த மாரி மகன் சத்யா(20) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முக்கிய குற்றவாளிகளான 4 பேரை குன்னம் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை முடிவில்தான் எந்த காரணத்திற்காக வயதான தம்பதியை கொலை செய்து, எவ்வளவு நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தனர் என்பது தெரியவரும் என்றும், இவ்வழக்கில் ஓரிரு நாட்களில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

Next Story