காதலுக்கு எதிர்ப்பு: பள்ளி மாணவி தற்கொலை; காதலன் தப்பி ஓட்டம்-உறவினர்கள் போராட்டம்


காதலுக்கு எதிர்ப்பு: பள்ளி மாணவி தற்கொலை; காதலன் தப்பி ஓட்டம்-உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2021 5:56 PM GMT (Updated: 20 Jun 2021 5:57 PM GMT)

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியாறு அணை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ஹேமலதா (வயது 16). இவர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியும், அதே முகாமை சேர்ந்த குமார் (22) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தது. இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி ஹேமலதாவை மட்டும் விஷம் குடிக்க வைத்து விட்டு குமார் குடிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. உயிருக்கு போராடிய ஹேமலதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடலை நேற்று இரவு வாணியாறு அணை முகாமிற்கு கொண்டு வந்தனர். அப்போது முகாமை சேர்ந்த உறவினர்கள் மாணவியின் உடலை அடக்கம் செய்ய மறுத்து காதலன் குமாரை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தாசில்தார் பார்வதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story