320 கிலோ அத்தியாவசிய பொருட்கள் பறிமுதல்


320 கிலோ அத்தியாவசிய பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 9:00 PM GMT (Updated: 21 Jun 2021 9:00 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனையில் 320 கிலோ அத்தியாவசிய பொருட்களை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர்:

மளிகை பொருட்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை பரவலின் தாக்கத்தினால் மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு உத்தரவின்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் சரியான அளவில் மேற்படி அரசு உதவிப் பொருட்கள் சேரும் வகையிலும், குடிமை பொருட்கள் திருட்டு போவதை தடுக்கவும் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டனர்.
பறிமுதல்
அதன்படி திருச்சி வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு மற்றும் குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், லாடபுரம் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அளவுக்கு அதிகமாக குடிமை பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சோதனையிட்டனர். இதில் அதிகமாக குடிமை பொருட்களை ஏற்றி வந்தவர்களிடம் இருந்து 320 கிலோ அத்தியாவசிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story