கலெக்டரிடம் வாகனத்தை ஒப்படைக்கும் நூதன போராட்டம்


கலெக்டரிடம் வாகனத்தை ஒப்படைக்கும் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 22 Jun 2021 4:39 AM GMT (Updated: 22 Jun 2021 4:39 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இருசக்கர வாகனத்தை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.

சேலம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இருசக்கர வாகனத்தை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் நூதன போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
போராட்டம்
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. மாநகர தலைவர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.  
கலெக்டரிடம் ஒப்படைக்க...
போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்து கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு வந்தபோது அவர்களை அங்கிருந்த பாதுகாப்பில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலையால் ஏழை, எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. ஆனால் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.
ஜி.எஸ்.டி.
தினமும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 வரை உயர்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் வாகனங்களை ஓட்ட முடியாத நிலைமையில் பொதுமக்கள் இருப்பதால் மாவட்ட கலெக்டரிடமும், பிரதமரிடமும் ஒப்படைக்க வந்துள்ளோம். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற்று ஜி.எஸ்.டி. கட்டுப்பாட்டுக்குள் அதனை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story