கோவில்பட்டி அருகே மனநல காப்பகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்


கோவில்பட்டி அருகே மனநல காப்பகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 22 Jun 2021 2:21 PM GMT (Updated: 22 Jun 2021 2:21 PM GMT)

கோவில்பட்டி அருகே, மனநல காப்பகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டி கிராமத் திலுள்ள ஆக்டிவ் மைன்ட்ஸ் மனநல காப்பகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமிலுள்ள மாற்றுத்திறனாளிகள் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். காப்பக நிர்வாகி தேன் ராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரி பிரம்ம நாயகம், கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கர நாராயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருந்த வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். ஆளுநர் உரையில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக சொல்லக் கூடிய வாய்ப்பு இருக்காது. தேர்தலின் போது மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வென்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை அகதிகள் முகாமில் கனிமொழி எம்.பி.நேற்று மாலையில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் முகாமில் உள்ள 382 குடும்பங்களுக்கு கொரோனா கால நிவாரணமாக 15 வகையான மளிகைப் பொருட்களை வழங்கினார்.  அங்கு ரூ.12 லட்சம் மதிப்பில் நடைபெறும் ரேஷன் கடை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, எட்டயபுரம் அருகே உள்ள குளத்துள்வாய்பட்டியில் உள்ள முகாமில் உள்ள 38 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. ஆய்வின் போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உடனிருந்தார்.

Next Story