பர்கூர் அருகே சோகம் ஊஞ்சல் ஆடிய போது சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி


பர்கூர் அருகே சோகம் ஊஞ்சல் ஆடிய போது சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுவன் பலி
x
தினத்தந்தி 22 Jun 2021 5:43 PM GMT (Updated: 22 Jun 2021 5:43 PM GMT)

பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடிய போது சேலை இறுக்கியதில் 13 வயது சிறுவன் பலியானான்.

பர்கூர்:
பர்கூர் அருகே ஊஞ்சல் ஆடிய போது சேலை இறுக்கியதில் 13 வயது சிறுவன் பலியானான்.
சிறுவன்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி அமராவதி (30), கூலித்தொழிலாளி. இவர்களுக்கு சிரஞ்சித் (13), புவனேஷ் (6) என்ற 2 மகன்களும், ஜோதி (9), யுவஸ்ரீ (7) என்ற மகள்களும் உள்ளனர்.  நேற்று காலையில் கோவிந்தராஜும், அமராவதியும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அவர்களின் மகன்களும், மகள்களும் வீட்டில் உள்ள கொட்டகையில் தனது தாயாரின் சேலையில் கட்டப்பட்டு இருந்த ஊஞ்சலில் விளையாடினார்கள்.
ஊஞ்சல் ஆடிய போது...
சிரஞ்சித் ஊஞ்சல் ஆடிய போது வேகமாக சுற்றி உள்ளான். இதில் சேலை அவனது கழுத்தை சுற்றி, எதிர்பாராதவிதமாக இறுக்கியது. அதில் இருந்து மீள முடியாமல் அவன் திணறினான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தங்கைகள், தம்பி கூச்சலிட்டு கதறினார்கள்.  அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவன் சிரஞ்சித்தை மீட்டு உடனடியாக பர்கூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர் அந்த சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.  இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறுவன் சிரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பர்கூர் அருகே வெங்கடாபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story