நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்ட பொதுமக்கள்


நீண்ட வரிசையில் காத்து நின்று தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Jun 2021 6:34 PM GMT (Updated: 22 Jun 2021 6:34 PM GMT)

கிணத்துக்கடவு அருகே கிராமப்பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே கிராமப்பகுதிகளில் நீண்ட வரிசையில் காத்து நின்று பொதுமக்கள் தடுப்பூசி போட்டுச்சென்றனர். பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் செலுத்த  கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா தடுப்பூசி 

கிணத்துக்கடவு தாலுகாவில் கொரோனா பரவலை தடுக்க வருவாய் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக இங்குள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடையே ஆர்வம் ஏற்பட்டு உள்ளதால், அதிகாலையிலேயே ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து டோக்கன் பெற்று செல்கிறார்கள். பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து வந்து தடுப்பூசி போட்டுச்செல்கிறார்கள். 

டோக்கன் பெற்று... 

இந்த நிலையில் நேற்றும் இந்த சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. இதை அறிந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலையிலேயே அங்கு வந்து நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. 

டோக்கன்களை பெற்றுக்கொண்டு சமூக இடைவெளியுடன் காத்து நின்று தடுப்பூசி போட்டுச்சென்றனர். மேலும் சில இடங்களில் பற்றாக் குறை காரணமாக ஏராளமான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

கூடுதலாக வினியோகம் 

தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு கிராம மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. இதனால் அவர்கள் அதை போட்டுக்கொள்ள சுகாதார நிலையங்களுக்கு செல்லும்போது அங்கு ஒரு நாளுக்கு 100 அல்லது 150 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது. 

அதிலும் சில இடங்களில் டோக்கன் பெற வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே இதைத்தடுக்க, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வினியோகித்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படாது. 

அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story