கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 41 பேர் கைது


கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 41 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jun 2021 7:47 PM GMT (Updated: 23 Jun 2021 7:47 PM GMT)

பொள்ளாச்சி, வாளையாறு பகுதியில் போலீசார் நடத்திய சோதனை யில் கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வாளையாறு பகுதியில் போலீசார் நடத்திய சோதனை யில் கேரளாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த 41 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். 

கேரளாவில் மதுக்கடை திறப்பு

கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்களில் திறக்கப்பட்டு உள்ளது. 

அதுபோன்று கோவை அருகே உள்ள கேரளாவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் மதுபானங்கள் வாங்க தமிழக-கேரள எல்லையில் இருக்கும் கிராமங்களுக்கு படையெடுத்து சென்று வருகிறார்கள். 

போலீசார் சோதனை 

அங்கிருந்து அதிகமாக மதுபானங்களை வாங்கி வந்து கோவை மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி துணை சூப்பிரண்டு தமிழ்மணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரபிரசாத், காலேப் மற்றும் போலீசார் கோபாலபுரம், நடுப்புணி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், நெடும்பாறை உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

41 பேர் கைது 

அப்போது கூடுதல் விலைக்கு விற்க கேரளாவில் இருந்து மதுபாட்டில் களை வாங்கி வந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 லிட்டர் கள், 160 மதுபாட்டில்கள், 10 வாகனங் கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

 மதுவிலக்கு துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ் மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் வாளையாறு, வீரப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது கேரளாவில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்த 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 மதுபாட்டில்கள், 16 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர். 

கெஞ்சினார்கள் 

இதற்கிடையே போலீசில் சிக்கியவர்கள், 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி வந்தோம். இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டோம். இந்த ஒருமுறை மன்னித்து விடுமாறு கெஞ்சினார்கள். 


Next Story