கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம்


கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம்
x
தினத்தந்தி 23 Jun 2021 11:19 PM GMT (Updated: 23 Jun 2021 11:19 PM GMT)

கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன.

ஈரோடு
கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன.
ரூ.1,000 கோடி ஜவுளிகள் 
ஈரோட்டில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள் பல்வேறு வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ரகங்கள் அனுப்பும் பணி நடைபெறவில்லை. 
இதன் காரணமாக ஈரோடு பகுதியில் உற்பத்தியான ரூ.1,000 கோடிமதிப்பிலான ஜவுளி ரகங்கள் குடோன்களில் தேங்கி உள்ளது. மேலும் இங்கு வர வேண்டிய ஆர்டர்களும் வடமாநிலங்களுக்கு செல்கிறது. எனவே தளர்வு வழங்கி கடைகளை செயல்படுத்த அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாதிப்பு
இதுகுறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ஸ்ட் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது:-
எங்கள் சங்கத்தில் மட்டும் 1,200 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஜவுளி மொத்த வியாபாரமாக தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்துக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறோம். கடந்த 50 நாட்களாக கொரோனா முடக்கத்தால் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இந்த தொழிலை நம்பி உள்ள உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், மடிக்காரர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகள் என பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் நடக்கவில்லை என்றாலும் அனைவருக்கும் சம்பளம், வாடகை, மின் கட்டணம், குடோன் மற்றும் கடை பாதுகாப்பு, காவலாளி சம்பளம், வரி, வட்டி, அபராதம் என அனைத்தையும் செலுத்துகிறோம்.
முழு தளர்வு
வடமாநிலங்களில் மும்பை, அகமதாபாத், ஜெய்ப்பூர், சூரத் என பல இடங்களில் ஜவுளி தொழிலுக்கு முழு தளர்வு வழங்கி, உற்பத்தி, ஏற்றுமதி நடக்கிறது. இதன் காரணமாக ஈரோட்டுக்கு வர வேண்டிய ஆர்டர்களில், வடமாநிலங்கள் 50 சதவீதத்துக்கு மேல் ஆர்டரை கைப்பற்றி வியாபாரத்தை பிடித்து வருகின்றனர். உற்பத்தி செய்த ஜவுளி ரகங்கள், விற்பனைக்கும், அடுத்த கட்ட பணிக்கும் அனுப்பி வைக்காமல் குடோன்களில் மட்டும், 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேங்கி கிடக்கிறது.
இதை அரசு உணர்ந்து இந்த தொழிலுக்கு முழு தளர்வு வழங்கி, தொழிலாளர்கள் முழுமையாக பணி செய்யவும், துணிகளை உடன் அனுப்பவும் அறிவிப்பு வழங்க வேண்டும். மேலும் வங்கி கடனுக்கு 3 மாத வட்டி தள்ளுபடி, அசலை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story