பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் பறிப்பு நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு


பண்ருட்டி அருகே  முந்திரி வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சம் பறிப்பு நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Jun 2021 4:56 PM GMT (Updated: 27 Jun 2021 4:56 PM GMT)

பண்ருட்டி அருகே முந்திரி வியாபாரியை கத்தியால் வெட்டி ரூ.50 லட்சத்தை பறித்த அவரது நண்பரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி, 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தெற்கு மேல்மாம்பட்டை சேர்ந்தவர்கள் வடிவேல் (வயது 42), கலைச்செல்வன்(37). இருவரும் முந்திரி வியாபாரிகள். இதனால் தொழில் ரீதியில் இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

 இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வன் வடிவேலுக்கு போன் செய்து, அவரை பார்க்க வருவதாக கூறினார். அதன்படி இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது கலைச்செல்வன், ரூ.3 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். 

இதையடுத்து வடிவேல் பணத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கலைச்செல்வன், தனது மோட்டார் சைக்கிளை மேலகுப்பம் அருகே நிறுத்தி வைத்துள்ளதாகவும், தன்னை அங்கு அழைத்துச்செல்லும்படி கூறினார். 

ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்

இதையடுத்து வடிவேல் கலைச்செல்வனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். காடாம்புலியூர் அருகில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கலைச்செல்வன் கூறினார். 

இதையடுத்து அவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது கலைச்செல்வன் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேலுவின் கழுத்தில் வைத்து, தனக்கு ரூ.2 கோடி வேண்டும், பணத்தை தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். 

இதற்கு மறுப்பு தெரிவித்த வடிவேல், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வன் தான் வைத்திருந்த கத்தியால் வடிவேலின் வலது மற்றும் இடது கையில் வெட்டினார்.

ரூ.50 லட்சத்துடன் ஓட்டம் 

இதனால் உயிருக்கு பயந்து போன வடிவேல், தனது மைத்துனர் வினோத் குமாருக்கு செல்போன் மூலம் பேசி வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.50 லட்சத்தை உடனடியாக எடுத்து வருமாறு கூறினார். 

இதையடுத்து வினோத்குமார் பணத்துடன் அங்கு வந்தார். அதை பெற்றுக்கொண்ட கலைச்செல்வன் அங்கிருந்த ஒரு மினி லாரியில் ஏறி தப்பி சென்றுவிட்டார். கத்திவெட்டில் இரு கைகளிலும் படுகாயமடைந்த வடிவேல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். 

சம்பவம் பற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் மற்றும் போலீசார் நேரில் வந்து வடிவேலிடம் விசாரணை நடத்தினர். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வனை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story