நீர் நிலைகளை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்


நீர் நிலைகளை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்
x
தினத்தந்தி 1 July 2021 5:51 PM GMT (Updated: 1 July 2021 5:51 PM GMT)

மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வளம் மேம்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்
மாவட்டம் முழுவதும் நீர் நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வளம் மேம்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 நீர்நிலைகள் 
விருதுநகர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளின் கட்டுப்பாட்டில் கண்மாய்கள் உள்ளன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதேபோன்ற யூனியன் கட்டுப்பாட்டிலும் பல்வேறு கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கான வரத்துக் கால்வாய்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் கண்மாய்களில் நீர் பெருகும் வகையில் வரத்து கால்வாய்களில் நீர் வருவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது. 
இதேபோன்று ஆனைக்குட்டம், இருக்கன்குடி, கோல்வார்பட்டி ஆகி ய அணைகளிலும் நீர்வளம் பெருகாத நிலையே நீடிக்கிறது. 
ஆக்கிரமிப்பு 
பெரும்பாலான கண்மாய் களிலும், அணைகளிலும் நீர்பிடிப்பு பகுதிகளில் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் கண்மாய்களில் நீர் பெருக வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. மேலும் வரத்து கால்வாய்களிலும் கருவேலமரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர்வர முடியாத நிலை உள்ளது. இந்த கருவேல மர ஆக்கிரமிப்புகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிலும் அணைக்கட்டுகளில், நீர் பிடிப்பு பகுதிகளிலும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதை பொதுப்பணித்துறையினர் இதனை கண்டு கொள்ளாத நிலையே நீடிக்கிறது. இதனால் இந்த அணைகளும் பாசன வசதிக்கு பயன்படாத நிலையில் வறண்டு கிடக்கின்றன. 
நடவடிக்கை 
கடந்த 2010-ம் ஆண்டு சிஜி தாமஸ் வைத்தியன் கலெக்டராக இருந்தபோது மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி அவற்றை பொது ஏலத்தில் விட்டு அதன் மூலம் அந்த வருவாயைக் கொண்டு மாவட்டம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனாலும் இந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டனவா என்பது கேள்விக்குறி தான். ஆனாலும் மாவட்ட நிர்வாகம் கண்மாய்களில் நீர்வளத்தை மேம்படுத்த ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தது பயன்தரக் கூடியதாக இருந்தது.
ஆனால் அதன்பின்னர் இம்மாதிரியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கண்மாய்களில் நீர் வளம் பெருக வாய்ப்பு ஏற்படும். மேலும் வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கருவேல மர ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அவற்றை அகற்ற பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டியது அவசியமாகும்.

Next Story