திருவரங்குளத்தில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பலி ஆலங்குடியில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்


திருவரங்குளத்தில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பலி ஆலங்குடியில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்
x
தினத்தந்தி 1 July 2021 7:18 PM GMT (Updated: 1 July 2021 7:18 PM GMT)

திருவரங்குளத்தில் பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து வாலிபர் பலியானார். ஆலங்குடியில் ஆம்புலன்ஸ் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

திருவரங்குளம்
பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்தது
புதுக்கோட்டை சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் தனது மனைவியுடன், நேற்று முன்தினம் காரில் ஆலங்குடியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு இரவு புதுக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருவரங்குளம் கியாஸ் கம்பெனி அருகில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள பாலத்தில் இருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சுரேசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சுரேஷ் மனைவி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வல்லத்தரா கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் பலி
ஆலங்குடி அருகே உள்ள மாங்கனாம்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் கார்த்திகேயன் (20). அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை மகன் ரமேஷ் (25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மாங்கனாம்பட்டிக்கு இரவு நேரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். மாஞ்சன் விடுதி விலக்கு ரோடு அருகே வந்தபோது, ஆலங்குடியிலிருந்து மணிப்பள்ளம் சாலை வழியே வந்த தனியார் ஆம்புலன்ஸ் 2 பேர் மீதும் மோதியது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 
 இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ரமேஷ் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்புலன்சை டிரைவர் தென்னதிரயன் பட்டி முருகராஜ் மகன் பார்த்திபன் (20) கைது செய்து, ஆலங்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் நல்லகண்ணு முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story