வளர்ப்பு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை


வளர்ப்பு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 2 July 2021 4:12 PM GMT (Updated: 2 July 2021 4:12 PM GMT)

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கூடலூர்,

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கண்ணில் பலத்த காயம்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமங்களா, வில்சன், உதயன், பொம்மன், மசினி, சேரன் உள்பட 30 வளர்ப்பு யானைகள் உள்ளது. இதற்காக கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் பாகன்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் மாயார் ஆற்றில் குளிப்பதற்காக சேரன் என்ற யானையை அதன் பாகன் முருகன் அழைத்து சென்றார். அப்போது அவர் தாக்கியதில் யானையின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு, பார்வை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாகன் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அந்த யானைக்கு கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் சிகிச்சை அளித்து வருகிறார்.

மருத்துவ பரிசோதனை

இந்த நிலையில் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், சென்னை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் ஷாநவாஸ் ஆகியோர் தலைமையிலான சிறப்பு மருத்துவ குழுவினர், முதுமலைக்கு வந்தனர். 

பின்னர் அவர்கள் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் முகாமில் உள்ள 29 வளர்ப்பு யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து கண்களின் பார்வை திறன் குறித்து ஆய்வு செய்தனர்.  மேலும் மசினகுடியில் மரக்கூண்டில் அடைத்து பராமரிக்கப்படும் ரிவால்டோ என்ற காட்டுயானைக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் சேரன் தவிர பிற யானைகளின் உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.


Next Story