ஆரணி அருகே இரும்பு ராடால் அடித்து வாலிபர் கொலை போலீசில் தந்தை சரண்


ஆரணி அருகே இரும்பு ராடால் அடித்து வாலிபர் கொலை போலீசில் தந்தை சரண்
x
தினத்தந்தி 2 July 2021 5:07 PM GMT (Updated: 2 July 2021 5:07 PM GMT)

ஆரணி அருகே ரேஷன் கார்டை எடுத்து சென்றது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய தந்தை போலீசில் சரணடைந்தார்.

ஆரணி

ரேஷன் கார்டை எடுத்து சென்றார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள களம்பூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் பாஸ்கரன் (வயது 33). இவர் சேலம் பகுதியை சேர்ந்த ரம்யா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திரு என்னும் மகன் உள்ளான்.

 திருமணமான ஒரு வருடத்திலேயே கணவருடன் ஏற்பட்ட தகராறில், ரம்யா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பாஸ்கரன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததுடன், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பாஸ்கரன் வீட்டில் இருந்த ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுள்ளார். பின்னர் பிற்பகல் 3.30 மணி அளவில் வீடு திரும்பி உள்ளார்.

அடித்து கொலை 

அவரிடம், தாய் பவானி ரேஷன் கார்டு எங்கே என்று கேட்டுள்ளார். இதனால் அவருடன் தகராறில் ஈடுபட்ட பாஸ்கரன், தாய் பவானியை தாக்கி விட்டு வெளியே சென்றுவிட்டார். இரவு 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரை, தந்தை தட்சிணாமூர்த்தி தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தட்சிணாமூர்த்தி இரும்பு ராடால் பாஸ்கரனை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார். 

போலீசில் சரண்

உடனே  தட்சிணாமூர்த்தி இரும்பு ராடுடன், களம்பூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது மகனை கொன்றுவிட்டதாகக்கூறி சரணடைந்தார். உடனே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று  பாஸ்கரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story