கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு சீல்


கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு சீல்
x
தினத்தந்தி 2 July 2021 5:20 PM GMT (Updated: 2 July 2021 5:20 PM GMT)

அதிக கட்டணம் வசூலித்த கொரோனா ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

பொள்ளாச்சி

அதிக கட்டணம் வசூலித்த கொரோனா ஆய்வகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதிகாரிகள் ஆய்வு 

பொள்ளாச்சி பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் ஆகியோர் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர்.

இதையடுத்து பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய மருத்துவ அதிகாரி ராஜ்குமார், நகராட்சி நகர்நல அதிகாரி ராம்குமார், டாக்டர் ரஞ்சித்குமார், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், ஜெயபாரதி, சேகர், சிவக்குமார், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பொள்ளாச்சி பகுதியில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு செய்தனர். 

2 ஆய்வகங்களுக்கு ‘சீல்’ 

அப்போது 2 ஆய்வகங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த ஆய்வகங்களை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் ஊத்துக்காடு ரோடு, பாலகோபாலபுரம் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமலும், மருத்துவ கழிவுகளை முறையாக அகற்றாமல் இருப்பது தெரியவந்தது. 

கூடுதல் கட்டணம் வசூல்

மேலும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு அரசு ரூ.900 கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. ஆனால் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.1200 முதல் ரூ.1900 வரை கட்டணம் வசூலித்து உள்ளனர். எனவே 2 ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. 

அரசு ஆஸ்பத்திரி, நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கும். எனவே இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story