ரவுடியை கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பி கைது


ரவுடியை கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 2 July 2021 5:26 PM GMT (Updated: 2 July 2021 5:27 PM GMT)

தளி அருகே ரவுடியை வெட்டிக்கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

தளி அருகே உள்ள கும்மளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் மகன் உதயகுமார் (வயது 30). ரவுடியான இவர் மீது தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் 2 கொலை வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி உதயகுமார் கும்மளாபுரத்தில் கவுரம்மா கோவில் அருகே காரில் சென்றார். அப்போது காரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவரை, அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டி சென்று அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில், துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

அண்ணன், தம்பி கைது

இந்த கொலை சம்பவம் குறித்து தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து கும்மளாபுரம் பகுதியை சேர்ந்த தேவர்பெட்டப்பா மகன் சம்பங்கி (35), இவருடைய தம்பி ரவி என்கிற பகவந்தா (28) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், உதயகுமார் அவர்களை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வந்ததும், சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து உதயகுமாரை வெட்டிக்கொலை செய்ததும்தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அண்ணன், தம்பியான சம்பங்கி, ரவியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story