சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு குழு


சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு குழு
x
தினத்தந்தி 2 July 2021 5:30 PM GMT (Updated: 2 July 2021 5:30 PM GMT)

திருச்சி மத்திய மண்டலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு குழு அமைக்கப்படும் என ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, ஜூலை.3-
திருச்சி மத்திய மண்டலத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு குழு அமைக்கப்படும் என ஐ.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
போலீஸ் துறை சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே கழிவுநீரை சுத்திகரித்து பூங்கா பராமரிப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். மேலும் காவலர் மன்றம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
அதன்பின்னர் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
திருச்சி மத்திய மண்டலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரம் சுற்றித்திரிந்த 50-க்கும் மேற்பட்டோரை மீட்டு மனநல சிகிச்சை மற்றும் காப்பகத்தில் சேர்த்துள்ளோம். இதேபோல வீட்டில் தனியாக வசிக்கும் முதியோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலோர கண்காணிப்பு குழு
புதுக்கோட்டை அமைதியான மாவட்டம். இங்கு சாதி தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்க கிராம கண்காணிப்பு குழுக்கள் வலுப்படுத்துவதோடு, சாதி உணர்வோடு இருக்கக்கூடிய நபர்களை கண்டறிந்து, பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
மத்திய மண்டலத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்கள், கடல் வழியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதியில் 32 கண்காணிப்பு குழுக்கள் உள்ளன. இதில் ஒரு சில குழுக்களில் ஏற்கனவே பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். தற்போது அனைத்து குழுக்களிலும் பெண்கள் உறுப்பினராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் காப்பகம்
மதுரை சம்பவம் எதிரொலியாக மத்திய மண்டலத்தில் குழந்தைகள் காப்பகங்களை கணக்கெடுத்து சமூக நலத்துறையோடு இணைந்து காவல்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு அதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும். சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி இந்த மோசடி நடைபெறுகிறது. பொதுமக்கள் சமூகவலைத்தளத்தில் தங்களது சொந்த தகவல்களை பகிர்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆசை தரக்கூடிய விளம்பரங்களை நம்பி கிரெடிட், டெபிட் கார்டுகள் விவரங்களை தெரிவிக்க கூடாது. ஓய்வூதியம் பெறக்கூடியவர்களின் வங்கி கணக்குகளை குறி வைத்து மோசடி நடக்கிறது. ஓ.டி.பி. எனும் ரகசிய குறியீடு எண் பற்றி வெளியில் யாருக்கும் தெரிவிக்க கூடாது.
சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு குழு
திருச்சி மத்திய மண்டலத்தில் கிராமங்கள், கல்லூரிகளில் `சைபர் கிளப்ஸ்' தொடங்க திட்டமிட்டுள்ளோம். சைபர் குற்றங்கள் பற்றி கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குழு தொடங்கப்படுகிறது. கணினி அறிவியல் படித்த மாணவர்களை சைபர் கிளப்பில் சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் குறித்து அரசின் அறிவுரைகள் பின்பற்றப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உடன் இருந்தார்.

Next Story