பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பிஸ்கெட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பிஸ்கெட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்தது-டிரைவர் படுகாயம்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 5:39 PM GMT (Updated: 2 July 2021 5:39 PM GMT)

நல்லம்பள்ளி அருகே பழுதாகி சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பிஸ்கெட் பாரம் ஏற்றி வந்த லாரி மோதி கவிழ்ந்ததில் டிரைவர் படுகாயம் அடைந்தார். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி:
லாரி மீது மோதியது
பெங்களூருவில் இருந்து பிஸ்ெகட் பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் முண்டாசுபுறவடை பிரிவு சாலை வழியாக நேற்று அதிகாலை திருச்சி மாவட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் இளங்கோ (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். 
அப்போது முண்டாசுபுறவடை அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்பகுதியில் மோதியது. இந்த விபத்தில், பிஸ்கெட் பாரம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் இளங்கோ படுகாயமடைந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய டிரைவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story