ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்த வைகை தண்ணீர்


ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்த வைகை தண்ணீர்
x
தினத்தந்தி 2 July 2021 6:39 PM GMT (Updated: 2 July 2021 6:39 PM GMT)

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரியகண்மாயை வந்தடைந்தது. அதனை கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராமநாதபுரம், 
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ராமநாதபுரம் பெரியகண்மாயை வந்தடைந்தது. அதனை கலெக்டர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
 வைகை தண்ணீர்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக வைகை அணையில் இருந்து ஜூன் மாதம் 23-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 1000 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் பெரிய கண்மாயை வந்தடைந்தது. 
இதன்மூலம் வைகை ஆற்றுப்படுகையில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை உள்ள குடிநீர் கிணறுகளில் நீர் ஊற்று திறன் மேம்படவும், பரமக்குடி, போகலூர், நயினார்கோவில் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட வைகை ஆற்று பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஆய்வு
ராமநாதபுரம் கலெக்டர் சந்திரகலா காருகுடி கிராமத்தில் அமைந்துள்ள ராமநாதபுரம் பெரிய கண்மாய் தலை மதகணையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு பெரிய கண்மாய்க்கு வரும் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வைகை அணையில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 2 அடி அளவிற்கு வந்த அடைந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.  பொதுப் பணித்துறை நீர்வள செயற்பொறியாளர் மதனசுதாகரன், உதவி செயற் பொறியாளர் நிறைமதி, உதவி பொறியாளர் சீனிவாசன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story