வங்கியில் பணம் எடுத்து விட்டு நடந்து வந்தவரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு


வங்கியில் பணம் எடுத்து விட்டு நடந்து வந்தவரிடம் ரூ.3 லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 2 July 2021 7:51 PM GMT (Updated: 2 July 2021 7:51 PM GMT)

காரியாபட்டியில் வங்கியில் பணம் எடுத்து விட்டு நடந்து வந்தவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர், ரூ.3 லட்சத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

காரியாபட்டி, 
காரியாபட்டியில் வங்கியில் பணம் எடுத்து விட்டு நடந்து வந்தவரை பின்தொடர்ந்து வந்த 2 பேர், ரூ.3 லட்சத்தை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
வங்கியில் பணம் எடுத்தார்
  
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மேல அழகிய நல்லூரை சேர்ந்தவர் சொக்கையன் (வயது72).  இவர் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 
இவர் நேற்று மதியம் 3 மணிக்கு காரியாபட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையில் வைத்து காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்து வந்து கொண்டு இருந்தார்.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சொக்கையனை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு அந்த பணப்பையை பிடுங்கியுள்ளனர். 
ரூ.3 லட்சம் 
அப்போது அவர்களிடமிருந்து பணத்தை காப்பாற்ற சொக்கையன் போராடினார். இதில் பையிலிருந்து ரூ.1 லட்சம் கீழே விழுந்தது.  மேலும், திருடன், திருடன் என அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பிடுங்கிக்கொண்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழே விழுந்த ரூ.1 லட்சத்தை எடுத்துக்கொண்டு சொக்கையன், காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
மர்மநபர்களுக்கு வலைவீச்சு 
அதன்பேரில் அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், காரியாபட்டி இன்ஸ்பெக்டர் மூக்கன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு சொக்கையன் தனியாக நடந்து வந்ததை நோட்டமிட்டு அறிந்துகொண்ட கொள்ளையர்கள், அவரை பின்தொடர்ந்து வந்து இந்த துணிகர செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. எனவே பணத்துடன் தப்பிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story