போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்


போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம்
x
தினத்தந்தி 2 July 2021 8:11 PM GMT (Updated: 2 July 2021 8:11 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்:

கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் இந்திய வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அல்லாத போலி கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதும், அவர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் சட்டப்படி குற்றமாகும். போலி நபர்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் நிரந்தர உடல் குறைபாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு காப்பீடு நிறுவனம் மூலம் இழப்பீடு பெற முடியாது.
அரியலூர் மாவட்டத்தில் சில பகுதிகளில் செயற்கை முறை இனவிருத்தி பணிக்காக தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை மூலம் பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் சினை ஊசி போட மட்டுமே அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களில் எவரேனும் கால்நடை மருத்துவர் என்று கூறி போலியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது முற்றிலும் தவறான செயலாகும். கால்நடைகளுக்கு சிகிச்சை பெற அரசிதழில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களை மட்டுமே அணுக வேண்டும்.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் இது போன்று போலி கால்நடை மருத்துவர்கள் குறித்த தகவலை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனரிடம் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். போலி கால்நடை மருத்துவர்கள் கண்டறியப்பட்டால், முதன்முறை ஆயிரம் ரூபாய் அபராதமும், 2-ம் முறை ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
எனவே, கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை தகுதி உள்ள அரசிதழில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்கள் மூலம் மட்டுமே சிகிச்சை பெறவும், போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு கால்நடை நலம் காத்திட வேண்டும் என்றும் கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story