நாகராஜா கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி


நாகராஜா கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
x
தினத்தந்தி 2 July 2021 8:17 PM GMT (Updated: 2 July 2021 8:17 PM GMT)

மண்டைக்காடு கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் நாகராஜா கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகர்கோவில்:
மண்டைக்காடு கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து நாகர்கோவில் நாகராஜா கோவில் ஊழியர்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. 
கோவிலில் தீ விபத்து 
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த மாதம் தீ விபத்து நடந்தது. இதில் கோவில் கருவறை மேற்கூரை எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் எதி ரொலியாக அனைத்து கோவில்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊழியர்களுக்கு பயிற்சி
அதன்படி, நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தடுப்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை தீயணைப்புத்துறை உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி இம்மானுவேல் அளித்தார். அப்போது கோவில் பிரகாரங்கள் மற்றும் வளாகங்களில் தீ விபத்து ஏற்பட்டால், அதனை எவ்வாறு தடுக்க வேண்டும்? கோவிலில் உள்ள தீயணைப்பான்களை பயன்படுத்தி எவ்வாறு தீயை அணைக்க வேண்டும்? கோவில் விழாக்காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைபவர்களை எவ்வாறு மீட்க வேண்டும்? சேலைகள் மற்றும் போர்வைகளை அவசர கால ஸ்ட்ரெக்சர்களாக பயன்படுத்துவது எப்படி? என்பன போன்ற பயிற்சிகளை செயல்விளக்கம் மூலம் செய்து காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நாகர்கோவில் தீயணைப்பு நிலைய அதிகாரி (போக்குவரத்து) பெனட் தம்பி உள்ளிட்ட தீயணைப்பு படையினர் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story