சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு நாளை முதல் அனுமதி


சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சிக்கு நாளை முதல் அனுமதி
x
தினத்தந்தி 2 July 2021 8:22 PM GMT (Updated: 2 July 2021 8:22 PM GMT)

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நாளை முதல் நடைபயிற்சிக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம்
கொரோனா சிகிச்சை மையம்
சேலம் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கம், தொங்கும் பூங்கா, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
தற்போது கொரோனா குறைந்துள்ளதால் பொன்னம்மாப்பேட்டை ஐ.ஐ.எச்.டி வளாகம் மற்றும் சோனா கல்லூரி வளாகம் தவிர பிற பகுதிகளில் செயல்பட்டு வந்த தற்காலிக சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அனைவரும் சிகிச்சை நிறைவடைந்து வீடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த மையங்களின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.
நடைபயிற்சிக்கு அனுமதி
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மைய செயல்பாடுகள் சில நாட்களுக்கு முன்னரே நிறுத்தப்பட்டதால், மாவட்ட விளையாட்டு மையத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அரசு ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பூங்காக்களில் நடைபயிற்சிக்கு பொதுமக்களை அனுமதிக்கலாம் என அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் பொதுமக்கள் நடைபயிற்சிக்கு அனுமதிப்பதற்காக நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியை நேற்று மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கில் பொதுமக்களை அனுமதிப்பதற்காக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணிகள் இன்று வரை நடைபெறும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்காக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்.
முக கவசம்
நடைபயிற்சிக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிந்து வருவதோடு, அரசின் கொரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடித்து விளையாட்டு அரங்கினை நடைபயிற்சிக்கு பயன்படுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆய்வின்போது மாநகர நல அலுவலர் பார்த்திபன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story