உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர்


உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர்
x
தினத்தந்தி 2 July 2021 9:05 PM GMT (Updated: 2 July 2021 9:05 PM GMT)

உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கியது. சிற்பங்கள் வடிவமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கியது. சிற்பங்கள் வடிவமைக்கும் பணி மும்முரமாக  நடந்து வருகிறது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15-வது நாளில் தேரோட்டம் நடைபெறும்.
இந்த தேர் கோவிலின் தேர்நிலையில் இருந்து புறப்பட்டு பழனிசாலை, தளிசாலை, வடக்கு குட்டைவீதி, சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடைவீதி, கொல்லம்பட்டறை, பொள்ளாச்சி சாலை வழியாக நிலையை வந்தடையும். தேரை பக்தர்கள் இழுத்து செல்ல, தேரை பின்னாலிருந்து யானை தள்ளி செல்லும். இந்த தேர் மரத்தினால் ஆனது. சக்கரங்கள் மட்டும் இரும்பால் ஆனது.
ரூ.54 லட்சத்தில் புதிய தேர்
இந்த கோவிலில் பழைய தேருக்கு பதிலாக புதிய தேர் செய்யப்படுகிறது. 5 நிலைகளை (அடுக்கு) கொண்ட இந்த புதிய தேரின் மொத்த உயரம் 12½ அடி. இதில் தேர்பலகை மட்டும் 9¾  அடியாகும். அதற்கு மேல் உற்சவருக்கான சிம்மாசனம் 2¾ அடி உயரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இந்த தேருக்கு 780 கன அடி இலுப்ப மரமும், 20 கனஅடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தளங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என மொத்தம் 220சிற்பங்கள் இடம்பெறும். இதுதவிர 120 போதியல் சிற்பங்களும் இடம்பெறும்.
சிற்பங்கள்
இந்த புதிய தேர் கட்டுமானப்பணிகளை உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள இடத்தில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் கவுதம் கைவினை தொழிலகம் ஸ்தபதி சி.வரதராஜன் தலைமையில் 13 பேர் மேற்கொண்டுள்ளனர். தேர் பணிகளில், மரத்தில் மிக நுணுக்கமாக செய்ய வேண்டிய அழகிய சிற்பங்களை வடிவமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை மாரியம்மன் கோவில் சார்பில் ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த புதிய தேர் எண்கோண வடிவில் செய்யப்படுகிறது. இந்த புதிய தேர் செய்யும் பணிகள் கடந்த ஆண்டு (2020) நவம்பர் மாதம் 4-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலையினால் இந்த பணிகள் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை பரவலால் பணிகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீண்டும் பணிகள் தொடக்கம்
கடந்த சுமார் 4 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பணிகள் நேற்று  மீண்டும் தொடங்கப்பட்டன. இப்போது இந்த தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்தபணிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story