மலைக்கிராமங்களில் வனஅதிகாரி ஆய்வு


மலைக்கிராமங்களில் வனஅதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2021 9:10 PM GMT (Updated: 2 July 2021 9:10 PM GMT)

பண்ணைக்காடு அருகே மலைக்கிராமங்களில் வன அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சூர், மூலையாறு, வடகரைபாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

 வன உரிமை சட்டப்படி வனப்பகுதிக்குள் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

 இதனையடுத்து பழங்குடியின மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழங்குடியின மக்கள் மச்சூர், வடகரைபாறை, ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் காபி, ஆரஞ்சு உள்ளிட்டவற்றை பயிரிட்டனர். 

இதையடுத்து அங்கு வனஊழியர்கள் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழங்குடியின மக்கள் கொடைக்கானல் ஆர்.டி.ஓ.விடம் புகார் செய்தனர். 

அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் நாகையா சம்பவ இ்டத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் வனத்துறையினர் தோட்டத்துக்குள் அத்துமீறியது தெரியவந்தது. 

இதையடுத்து அவர் வன உரிமை சட்டத்தில் வழங்கிய நிலங்களில் இது போன்ற நிகழ்வை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story