துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2021 9:24 PM GMT (Updated: 2 July 2021 9:24 PM GMT)

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.20 லட்சம் தங்கத்துடன் கேரளா வாலிபர் பிடிபட்டார்.

மங்களூரு:
  
துபாய் விமானம்

  தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பஜ்பே சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் கர்நாடகம்-கேரளா எல்லையில் உள்ளது. இதனால் அடிக்கடி கேரளாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

  இதனால் விமானத்தில் தங்கம் கடத்தி வருபவர்களை பிடிக்க சுங்கவரித் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பஜ்பே விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது.

ரூ.20 லட்சம் தங்கம் சிக்கியது

  அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், அவரை பரிசோதித்தனர். அப்போது அந்த நபர் தனது வயிற்றில் ஏதோ பொருட்களை பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவரது வயிற்றை சுத்தம் செய்து வயிற்றில் இருந்த பொருட்களை வெளியே எடுத்தனர். 3 சிறிய பாக்கெட் வடிவில் தங்கத்தை பதுக்கிவைத்து அந்த நபர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 430 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்து 800 என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவை சேர்ந்தவர் கைது

  இதுதொடர்பாக கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மொய்தீன் முனாசீர் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story